தேசிய ஷூறா சபையின் உழ்ஹிய்யா வழிகாட்டல் – 2016

உழ்ஹிய்யா

இஸ்லாத்தில் உழ்ஹிய்யாவின் முக்கியத்துவம், நன்மைகள் மற்றும் அது தொடர்பான  மார்க்க சட்ட திட்டங்கள் என்பவற்றை  தற்போது உலமாக்கள் வழங்கி வருகின்றனர். அவை தொடர்பான மேலதிக விபரங்களை அவர்களை அணுகி அறிந்து கொள்ள முடியும்.என்றாலும் நாட்டின் நிலவரங்கள், நாம் வாழுகின்ற சூழல் என்பவற்றைக் கருத்திற் கொண்டு உழ்ஹிய்யா கொடுப்பது தொடர்பாக தேசிய ஷூரா சபை கீழ் காணும் வழிகாட்டல்களை வழங்க விரும்புகின்றது :

  1. உழ்ஹிய்யாவை நாட்டின் சட்ட-விதிமுறைகளுக்கமைய, சமூக நால்லிணக்கத்தைக் கருத்திற்கொண்டு இலங்கை முஸ்லிம்கள் நிறைவேற்ற வேண்டும்.
  2. ஆடு, மாடு ஆகியவற்றை உழ்ஹிய்யாவாகக் கொடுக்க முடியுமாக இருந்தாலும் ஆடுகளைக்  கொடுப்பதே விரும்பத்தக்கதாகும்.
  3. உழ்ஹிய்யா நடைமுறையானது  நாட்டின் அனைத்து முஸ்லிம்களும் ஏழை-பணக்கார விதியாசமின்றி ஈத்பெருநாளை மகிழ்வுடன் கொண்டாடுவதற்கு வழிவகுக்கிறது. மேலும், இதன் மூலம் நாட்டின் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தேசிய விவசாயிகளும் கூடிய நன்மை பெறுவார்கள். வருடாந்த உழ்ஹிய்யா நடவடிக்கை மூலம், சுமார் 250 மில்லியன் ரூபா தேசிய உள்நாட்டு உற்பத்திக்கும், உள்நாட்டு விவசாயிகளுக்கும் கிடைக்கப்பெறுகின்றது (மதிப்பீடு 2013).
  4. விலங்குகளை வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது (Transportation) பின்வரும் விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியுள்ளது;
    1. ஆடு/மாடுகளை வாங்கும் போது கிராம உத்தியோகத்தரினால்(GS) மிருகத்தின் உரிமை அத்தாட்சிப்படுத்தப்படல் வேண்டும்.
    2. பின்னர் மிருக வைத்தியரிடமிருந்து  (Veterinary Surgeon) மிருகத்தின் உரிமைக்கான சான்றிதழ்,மாட்டு விபர சீட்டு(Cattle Voucher), சுகாதார அத்தாட்சிப் பத்திரம் (Health Certificate) என்பவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு ஒரு மாட்டிற்கு 50 ரூபா செலுத்த வேண்டும்.
    3. மிருகங்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதியை (Transport Permit) பிரதேச செயலகத்தில் (DS Office) பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு ஒரு மாட்டிற்கு 50 ரூபா செலுத்த வேண்டும்.
    4. மேற்குறிப்பிட்ட சான்றிதழ்கள் மற்றும் அனுமதிப்பத்திரங்களை விலங்குகளின் உரிமையாளரை முதன்மைப்படுத்தி அவர் மூலம் பெற்றுக்கொள்வது மிகப் பொருத்தமானதாகும்.
    5. மிருகங்களை எடுத்துச் செல்வதற்குப் பொருத்தமான வாகனத்தைப் பயன்படுத்த வேண்டும்.   அரசாங்க வர்த்தமானியின் படி விலங்குகளை வாகனத்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்பட்ட அளவு:

 விலங்கின் வகை நிறை (Kg)

அதிகூடிய எண்ணிக்கையான விலங்குகள் /சதுர மீற்றருக்கு

மாடு / எருமை 40க்கு குறைந்த 5
60க்கு குறைந்த 4
70க்கு குறைந்த 3
200க்கு குறைந்த 1
400க்கு குறைந்த 1
500க்கு குறைந்த 0.8
வெள்ளாடு / செம்மறி ஆடு 20க்கு குறைந்த 6
30க்குகுறைந்த 5
40க்கு குறைந்த 4
70க்குகுறைந்த 3

(இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானிப் பத்திரிகை (அதி விசேஷட) இல. 1629/17 – 2009.11.26)

  1. குர்பான் செய்வதற்குப் பொருத்தமான இடம், நேரம் என்பவற்றை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பிற சமயத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உழ்ஹிய்யா செய்யப்படும் இடம் மறைவானதாக இருப்பது மிகவும் அவசியமாகும்.
  2. குர்பான் தொடர்பான விளம்பரங்களை பொது ஊடகங்களில் பிரசுரிப்பதைத் தவிர்த்துக் கொள்வதுடன்,தத்தமது மஹல்லாக்களை மையப்படுத்தி பிரதேச சூழலுக்கு ஏற்ப பொது மஷூறாவின் அடிப்படையில் உழ்ஹிய்யா விடயங்களை முன்னெடுப்பது சிறந்தது.
  3. பள்ளிவாசல் வளவுகளுக்குள் குர்பான் செய்யவதைத்தவிர்ந்து கொள்வது சிறந்தது. ஒரே இடத்தில் அதிகளவிலான விலங்குககளை குர்பான் செய்வதைத் தவிர்த்து அதற்குப் பதிலாக பொருத்தமான பல இடங்களைத் தெரிவு செய்து அங்கு குர்பான் நடவடிக்கைகளைச் செய்வது விரும்பத்தக்கதாகும்.
  4. பிரதேச உள்ளூராட்சி மன்ற (மாநகர / நகர/ பிரதேச சபை) மிருக வைத்தியரை சந்தித்து குர்பானிக்கான உரிய அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
  5. மிருக வைத்தியர்/ உள்ளூராட்சி சபையின் உரிய அதிகாரியினால் உழ்ஹிய்யா செய்யும் இடத்தைப் பார்வையிட உரிமை உண்டு.
  6. குர்பான் செய்யப்பட்ட பின் விலங்குகளின் கழிவுகளை (எலும்பு, கால், இரத்தம், சாணம், தோல் என்பவற்றை) மிகவும் பொறுப்புணர்வுடன், உரிய முறையில் பூமியின் ஆழத்தில் புதைப்பது மிகவும் அவசியமாகும்.
  7. குர்பான் பங்கீட்டின்போது ஒழுங்கு முறைப்படியும், சாணக்கியமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
  8. ஜீவகாருண்யத்தை பற்றியும் அயலவர்களைத் துன்புறுத்துவதைத் தவிர்க்குமாறும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. உழ்ஹிய்யா கொடுக்கும் போது அவற்றை கருத்திற்கொள்ளுமாறு ஞாபகப்படுத்துகிறோம்.

குறிப்பு: தேசிய ஷூறா சபையின் இணையத்தளமான  www.nationalshoora.com இலிருந்து இவ் உழ்ஹிய்யா வழிகாட்டலைப் பெற்று  உங்கள் பிரதேச மஸ்ஜித்களுக்கும் கிடைக்கச் செய்யவும். இதனை ஜும்ஆ தொழுகையின் பின்னர் வாசித்து பொது மக்களுக்கு தெளிவுபடுத்துவதுடன் மஸ்ஜித்  அறிவித்தல் பலகையில் பிரசுரிக்கமாறு மஸ்ஜித் நிருவாகிகளை வேண்டிக்கொள்ளவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top