ரமழான் கால வழிகாட்டல்கள் – 2016

ரமழான் மாதத்தை முஸ்லிம்கள் எவ்வாறு கழிப்பது என்பது சம்பந்தமான சில ஆலோசனைகளை தேசிய ஷூறா சபை வழங்க விரும்புகிறது.

ஆன்மீகப் பகுதி

  1. அல்லாஹ்வுடனான நமது உறவை மென்மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கான அருமையான வாய்ப்பாகப் புனிதமான ரமழான் மாதத்தை நாம் அனைவரும் பயன்படுத்திக்கொள்வது அவசியமாகும். நோன்பு நோற்பதுடன் திலாவதுல் குர்ஆன்,திக்ர்கள், இஸ்திக்பார், இரவு வணக்கங்கள் என்பவற்றில் அதிக கவனம் எடுக்க வேண்டும். இவற்றால் மனதைரியமும் துன்பங்களின் போது பொறுமையும் ஏற்படும். எமக்கான அணிகலன்களாக மன்னிப்பது, பொறுமை, அல்லாஹ்வின் கூலியில் நம்பிக்கை, ஈகை, உளப்பரிசுத்தம் என்பன  இருக்கட்டும்.

சமாதன சகவாழ்வு

  1. பள்ளிவாயலில் இஷாத் தொழுகையை தொடர்ந்து தராவீஹ் தொழுகையை இயன்றவரை நேரகாலத்தோடு நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்கு உடனடியாக திரும்புவது நல்லது.
  2. ஆண்களது மேற்பார்வையுடனும் பாதுகாப்புடனும் பெண்கள் பள்ளிவாயளுக்கு தராவீஹ் தொழுகைக்காக வருவது எல்லா வகையிலும் சிறந்ததாகும்.
  3. பள்ளிவாயலின் வெளி ஒலி பெருக்கிகளை அதான் மற்றும் விஷேட அறிவித்தல்களைத் தவிர பயான்கள், தொழுவித்தல் போன்றவற்றிற்காக பயன்படுத்துவதை முற்றாகத்  தவிர்க்க வேண்டும்.
  4. பள்ளிவாயல்களுக்கு வருவோர் தமது வாகனங்களை உரிய வாகன தரிப்பிடங்களிலோ அல்லது வேறு பொருத்ததமான இடங்களிலோ பிறருக்கு தொந்தரவு ஏற்படாத விதத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்தல் வேண்டும்.இதில் பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்பும் வழிகாட்டல்களும் அவசியமாகும்.
  5. சந்திகள், கடைத் தெருக்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், பாதை ஓரங்கள் என்பவற்றில் கூட்டம் கூட்டமாக நின்று கதைத்துக் கொண்டிருப்பதானது வீண் வம்புகளுக்கும் வாதப் பிரதிவாதங்களுக்கும் இட்டுச்செல்லும் இன்பதால் அவற்றைத் தவிர்ப்பது நல்லதாகும்.
  6. பாதசாரிகளுக்கும் வாகனப் போக்குவரத்துக்கும் அண்டை அயலாருக்கும் தொந்தரவாக அமையும் என்பதால் பாதைகளில் விளையாடுவதை  முற்றாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு பெற்றாரின் கண்கணிப்பு மிகவும் அவசியமாகும்.
  7. பிரதேச உலமாக்கள்,கல்விமான்கள், முக்கியஸ்தர்கள் போன்றோரை உள்ளடக்கிய ஆலோசனை சபை ஒன்றை ஒருவாக்கிக்கொள்வதோடு மிக முக்கியமான பிரச்சினைகள் ஊரில் தோன்றும் போது அவர்களது ஆலோசனைகளைப் பெற்று அதன்படி நடப்பது.
  8. ரமழான் காலத்திலும் ஏனைய காலங்களிலும் ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள பொலிஸ் நிலைய அதிகாரிகள்,பிற மத ஆலயங்களது மதகுருமார் ஆகியோருடன் முஸ்லிம்கள் தொடர்புகளை ஏற்படுத்தி நல்லுறவைப் பேணிக்கொள்ள வேண்டும். ஏதாவது அசம்பாவிதங்கள், இன முறுவல்கள் ஏற்பட்டால் அவர்களுடன் தொடர்பு கொண்டு நிலமையை வழமைக்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும். இப்தார் மற்றும் பெருநாள் தின நிகழ்வுகளுக்கு அவர்களை அழைப்பது பொருத்தமாக அமையும்.

சமூகக் கட்டுக்கோப்பும் நற்பண்பாடும்

  1. இயக்கங்களுக்கிடையிலான மோதல்களை உருவாக்கும் வகையிலான சொற்பொழிவுகளை உலமாக்கள் தவிர்ப்பதுடன் நல் அமல்களில் மக்கள் ஆர்வத்தோடு ஈடுபடும் வகையிலான கருத்துக்களை உள்ளடக்கிய குத்பா பிரசங்கங்களையும் வேறு உபந்நியாசங்களையும் செய்வது சாலச் சிறந்ததாகும்..
  2. குறிப்பாக இளைஞர்கள் வழிபிறழ்ந்து விடாதிருக்கவும் பிறருக்கு தொந்தரவின்றி இரவு காலங்களைக் கழிப்பதற்கும் ஒழுக்க விழுமியங்களுடன் வாழ்வதற்குமான ஏற்பாடுகளைச் செய்வது அவசியமாகும்.காரணம் இளைஞர்களது நிலை மிகவுமே கவலைக்கிடமாகவுள்ளது.
  3. சினிமா  மற்றும் ஆபாச  காட்சிகளைப் பார்ப்பது,போதை பொருட்களைப் பாவிப்பது, முறையற்ற ஆண்-பெண் தொடர்புகள் போன்ற இஸ்லாம் எந்த வகையிலும் அங்கீகரிக்காத-ஹராமான  செயல்பாடுகளில் இருந்து  எல்லாக் காலங்களிலும் அனைவரும் ஒதுங்கியிருக்க வேண்டும்.குறிப்பாக பெற்றோர் தமது பிள்ளைகளது நடவடிக்கைகளை புனிதமான ரமழான் மாதத்தில் தீவிர கண்காணிப்புக்கு உற்படுத்துவதும் அவர்களை நெறிப்படுத்துவதும் கட்டாயக் கடமையாகும்.
  4. ”நேரங்களை விட கடமைகள் அதிகம்” என்பதனால் சமூக வலைத்தளங்களிலும் வேறு பொழுது போக்கு அம்சங்களிலும் நேரத்தை விரயம் செய்வதை தவிர்த்து  இபாதத்களிலும் தஃவா மற்றும் சமூக நலப் பணிகளிலும் நாட்டுக்கும் சமூகத்திற்கும் உலகுக்கும் மறுமைக்கும் பயனளிக்கும் காரியங்களிலும் ஈடுபடுவது சாலச் சிறந்ததாகும்.

பொருளாதரப் பகுதி

  1. எதிர்பாராத விதமாக அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தாலும்  மண்சரிவாலும் முஸ்லிம்களிலும் முஸ்லிம் அல்லாதவர்களிலும் கணிசமான தொகையினர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வாழ்வாதாரங்களை பலர் இழந்து தவித்துக்கொண்டிருக்கிறார்கள். இது  ஒருவகையில் அவர்களுக்கான அல்லாஹ்வின் சோதனையாகும்.பொறுமையோடு இருக்கிறார்களா,படிப்பினை பெறுகிறார்களா என அவர்களை அல்லாஹ் சோதிக்கிறான்.மற்றொருவகையில் இது பாதிக்கப்படாதவர்களுக்கான  சோதனையுமாகும்.பாதிக்கப்பட்டவர்களுக்கு இவர்கள் உதவுகிறார்களா என்று அல்லாஹ் சோதிக்கிறான்.எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு கைகொடுப்பது ஓரு மார்க்கக் கடமையும் புனிதமான இபாத்தும் மனிதாபிமானப் பண்புமாகும்.அவர்களுக்கான எமது உதவிகள் பின்வரும் வகைகளில் அமையலாம்:

அ. அவர்களது இல்லிடங்களையும் பாதைகளையும் மற்றும் வியாபாரத் தலங்களையும் துப்பரவு செய்து கொடுப்பது,

ஆ. உணவு,உடை,இல்லிட ,சுகாதார  தேவைகளைப் பூர்த்தியாக செய்து கொடுப்பது,

இ. அவர்களுக்கு ஆறுதல் கூறுவதுடன் மானுசீக ரீதியாகவும் ஆத்மீக ரீதியாகவும் அவர்களைப் பலப்படுத்துவது,

ஈ. அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்களை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வது ,

உ. இவற்றுக்கும் மேலாக அவர்களிற் பலர் தமது வாழ்வாதாரங்களான தொழிகளையும் ஏன் தொழிலுக்குப் பாவித்து வந்த உபகரணங்களையும் கூட இழந்திக்கிறார்கள்.பழைய நிலைக்கு அவர்கள் திரும்புவதற்கு மட்டுமல்ல அதனை விட உயர்ந்த நிலைக்கு அவர்கள் வருவதற்கும் நாம் முடிந்தவரை உதவுவது.

இதுபோன்ற நற்பணிகளில் முடிந்தவரை  ஒவ்வொருவரும் இந்த புனித ரமழானில் பங்கெடுக்க வேண்டும்.

இறைத் தூதர் (ஸல்) அவர்கள் ஏனைய மாதங்களை விட ரமழான் மாதத்தில் அதிகம் வாரி வழங்கக் கூடியவராக இருந்துள்ளார்கள். ரமழானில் ஜிப்ரில் (அலை) சந்திக்கும் நாட்களில் நபியவர்கள் பலமாக வீசும் காற்றை விட வேகமாக தர்மம் செய்யும் கொடை வள்ளலாக இருந்தார்கள். என இப்னு அப்பாஸ் (ரழி) தெரிவித்தார்கள். (புகாரி, முஸ்லிம்),”அடியானின் பணம் ஸதகா (தர்மம்)செய்வதன் மூலம் குறைந்துவிடமாட்டாது” என்றும் நபி(ஸல்)கூறினார்கள்.(திர்மிதீ)

எனவே,இந்த ரமழானை பிறரது கஷ்ட்ட துன்பங்களில் பங்கெடுக்கும் ரமழானாக ஆக்கிக் கொள்வோமாக!

  1. கொழும்பு போன்ற நகர்ப் புறங்களுக்கு முஸ்லிம் சமுகத்தைச் சேர்ந்த யாசகம் கேட்போர் வந்து பாதை ஓரங்களில் தங்குவதாலும் பிற மதத்தவர்களது வியாபார நிலையங்களுக்கும் வீடுகளுக்கும் செல்வதாலும் முஸ்லிம் சமூகம் பற்றிய பிழையான மனப்பதிவுகள் ஏற்படலாம். அத்துடன் தற்போதைய சூழலில் இன ரீதியான அசம்பாவிதங்களுக்கும் அது வழி வகுக்கலாம் என்பதால் ஊர்களில் ஸகாத்,ஸதகாக்கள் உரிய முறையில் விநியோகிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதுடன் யாசக முறையை நீக்குவதற்கான காத்திரமான வழிமுறைகளைச் செய்வதும் நல்லது. ஆடம்பர இப்தார்களை எற்பாடு செய்வோர், பல தடவை உம்ராக்களுக்காக செல்பவர்கள் உடனடியாக முன்னுரிமைப்படுத்த வேண்டிய- ஏழ்மையை கட்டுப்படுத்தல் போன்ற திட்டங்களுக்காக தமது பணத்தைச் செலவிடலாம்.
  2. பள்ளிவாயில்களில் கடமைபுரிவோருக்கான விசேட கொடுப்பனவுகளை பள்ளிவாயில் நிர்வாகிகள் வழங்க வேண்டும்.முதலாளிமார் தமக்குக் கீழால் பணிபுரியும் தொழிலாளர்களுடன் இரக்கமாக நடந்து கொள்வது, அவர்களின் வேலைப்பளுவை முடிந்தவரை குறைப்பது, நேரத்திற்கு தொழுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பது, தூரத்திலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு நிலைமைக்கேற்ற சலுகைகளை வழங்குவது,ஊதியத்திற்கு மேலதிகமான கொடுப்பனவுகளை வழங்குவது போன்ற விடயங்களில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

உடல் நலம்

  1. பொதுவாக நோன்பு உடல் நலத்துக்கு உகந்ததாக இருந்தாலும் நோன்பு காலத்தில் அதிகமாக சீனி மற்றும் கொழுப்புத் தன்மை கொண்ட உணவுகள்  உற்கொள்ளப்படுவதால் கொலொஸ்ட்ரோல்,சீனி, இரத்த அழுத்தம் என்பன அதிகரிக்கின்றன. இதனால் நோன்பு காலத்திலும் அதன் பின்னரும்  சிகிச்சைகளுக்காக அதிக பணத்தை செலவு செய்ய வேண்டியேற்படுகிறது.சஹர் ,இப்தார் வேளைகளில் அளவுக்கதிகமாக உணவை உற்கொள்வதனால் நோன்பின் நோக்கமாகிய ஏழைகளது பசியை உணர முடியாத சூழல் உருவாகிறது.எனவே,  முஸ்லிம் சமூகத்தின் உணவுப் பழக்கவழக்கம் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வுகள் ரமழானிலுன் அதன் பின்னரும் அதிகமாக இடம்பெரவேண்டும்.

பொறுப்புதாரிகளது அமானிதம்

  1. முஸ்லிம் சமுதயத்தில் ஆழமான ஈமானும் சமூக ஐக்கியமும்,தெளிந்த சிந்தனையும் உலக,மார்க்க அறிவுகளில் ஆழமும்,பண்பாட்டு விழுமியங்களில் உச்ச நிலையும்,பிற சமூகங்களுடன் நல்லுறவும் ஏற்படவேண்டியிருப்பதால் பொறுப்புக்களை வகிப்பவர்கள் தமது பொறுப்புக்களை அமானிதங்களாகக் கருதி தத்தமது சக்திக்கு உட்பட்ட வகையில் செயல்பட வேண்டும்.

19.பள்ளிவாயல்கள், பாடசாலைகள், கிதாபு, ஹிப்ள், குர்ஆன்  மத்ரஸாக்கள், அஹதியாக்கள், சங்கங்கள்,கழகங்கள், இஸ்லாமிய இயக்கங்கள் போன்றவற்றுக்குப் பொறுப்பாக இருப்பவர்கள் இக்காலப் பிரிவில் தமது கடமைகளில் கண்ணும் கருத்துமாக நடந்து கொண்டு சமூகத்தை நெறிபிறழ்வுகளில் இருந்து பாதுகாப்பதற்கும் உயர் குறிக்கோள்களை நோக்கி அழைத்துச் செல்வதற்கும் தம்மாலான சகல முயற்சிகளிலும் ஈடுபடுவது வாஜிபாகும்.

\”நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள் உங்கள் பொறுப்பு பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் பொறுப்பாளர். அவரது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார்.  (அல்புகாரி, முஸ்லிம், அபூதாவுத், அத்திர்மதி)

மேற்கூறிய வழிகாட்டல்களை கவனத்திற் கொண்டு மிகுந்த பொறுப்புணர்சியுடன் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் என தேசிய ஷூறா சபை இலங்கை வாழ் முஸ்லிம்களை வினயமாகக் கேட்டுக் கொள்கிறது.

அனைவருக்குக் வல்ல அல்லாஹ் புனித ரமழானை பாக்கியமுள்ளதாகவும் பாதுகாப்பன காலமாகவும் ஆக்குவானாக!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top