தேசிய ஷூரா சபையின் ஆலோசனைக் கூட்டமும் வருடாந்த பொதுக்கூட்டமும் 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமைகொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஸஸகாவா கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தேசிய ஷுரா சபையின் தலைவர் அல்ஹாஜ் தாரிக் மஹ்மூத் தலைமையில் இடம்பெற்ற முதலாம் அமர்வில் விஷேட அதிதியாகக் கலந்து சிறப்பித்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைத்துறை முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் ஏ.என்.நவரத்ன பண்டார அவர்கள் “நாட்டை கட்டியெழுப்புவதில் சிவில் சமூகத்தின் வகிபாகம்” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
தேசிய ஷுரா சபையின் முதலாவது செய்தி மடல் இதில் வெளியிட்டு வைக்கப்பட்டது. அதனை தேசிய சூரா சபையின் ஊடகத்துறை உப குழுவின் தலைவர் சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ் அவர்கள் பிரதம அதிதிக்கு வழங்கிவைத்தார்.
உப தலைவர்களில் ஒருவரான அஷ்ஷைக் பளீல் தலைமையில் இடம்பெற்ற இரண்டாவது அமர்வில் “சமூகத்துக்கான ஒட்டுமொத்த குரலை உருவாக்குதல் – கற்ற பாடங்களும் எதிர்கால நகர்வுகளும்” என்ற தலைப்பில் மற்றுமொரு உபதலைவரான ரீஸா யஹ்யா உரை நிகழ்த்தினார்.
தேசிய சூரா சபையின் பொதுச் செயலாளர் ஷெய்க் இனாமுல்லாஹ் மஸிஹுத்தீன் தேசிய சூரா சபையின் கடந்தகால செயல்பாடுகள் மற்றும் அடைவுகள் பற்றிய உரையை நிகழ்த்தினார்.
மற்றொரு உபதலைவர் சட்டத்தரணி ரீ.கே. அஸுர் தலைமையில் மூன்றாம் கட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. அதில் செயலாளர் ஷெய்க் இனாமுல்லாஹ் மஸிஹுத்தீன் அவர்களால் கடந்த கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டதுடன் நிதி அறிக்கையை பொருளாளர் மெளலவி ஸியாத் இப்ராஹீம் முன்வைத்தார்.
இந்த அமர்வின் போது எதிர்வரும் காலத்துக்கான நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்கள் 34 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.
நிகழ்வில் ஷூரா சபையின் நிறைவேற்றுக் குழு, செயலகக் குழு, பொதுச் சபை, ஷுரா சபையின் உறுப்பு அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வந்து கலந்துகொண்ட உலமாக்கள், புத்திஜீவிகள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
புதிய நிறைவேற்றுக் குழுவின் தலைவராக அல்ஹாஜ் தாரிக் மஹ்மூத் அவர்களும், உபதலைவர்களாக அஷ்ஷைக் எஸ்.எச்.எம் பஃளீல்,சகோ.ரீஸா யஹ்யா,சட்டத்தரணி ரீ.கே.அஸுர் ஆகியோரும் பொதுச் செயலாளராக ஷெய்க் இனாமுல்லாஹ் மஸிஹுத்தீன் அவர்களும் உதவிப் பொதுச் செயலாளர்களாக சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ், சகோ.இஸ்மாயில் ஏ அஸீஸ் ஆகியோரும் பொருளாளராக அஷ்ஷைக் ஸியாத் எம் இப்ராஹீம், உப பொருளாளராக அஷ்ஷைக் எஸ்.எல்.எம்.நவ்பர் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
தேசிய ஷூரா சபையின் தோற்றம், வளர்ச்சி கடந்தகால செயல்பாடுகள் தொடர்பான காணொளி ஒன்றும் காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சிகளை அஷ்ஷைக் அப்துல்லாஹ் மொஹிதீன் சகோ.இஸ்மாயில் அஸீஸ் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.