மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கை இன்று சபையில் விவாதிக்கப் படுகிறது : முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு தேசிய ஷூரா சபை அறிவுறுத்தல்.
புதிய முறையில் தேர்தல் இடம் பெறுமெனில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் 50 % வீதம் குறைவடையும் என தேசிய ஷூரா சபை அச்சம் வெளியிட்டுள்ளது.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி (20/09/2017) மாகாண சபைத் தேரதல திருத்தச் சட்ட மூலத்திற்கு பாராளுமன்றத்தில் சகல முஸ்லிம் உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
புதிய ஆசன மற்றும் விகிதாசார கலப்புத் தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைக்கான பிரத்தியேகமான தொகுதி எல்லைகளை மீள் நிர்ணயம் செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு அதன அறிக்கையை கடந்த 10/02/2018 அன்று உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சரிடம் சமர்ப்பித்தது.
அதனை அமைச்சர் 06/03/2018 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார், தற்பொழுது பல மாகாண சபைகள் களைக்கப்பட்டுள்ள நிலையிலும் ஏனைய சபைகளின் கால எல்லை எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் முடிவிற்கு வரும் நிலையிலும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டிய கட்டாய நிலை அரசிற்கு எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று 06/07/2018 மாகாண சபை களிற்கான புதிய எல்லைகள் நிர்ணய குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் படவுள்ளது.
கடந்த 20/03/2018 அன்று தேசிய ஷூரா சபை முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை கொழும்பில் அழைத்து கலந்துரையாடிய பொழுது மேற்படி எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கு தேசிய ஷூரா சபையினாலும் அதன் வழிகாட்டலில் நாடு முழுவதும் முஸ்லிம்களால் முன்வைக்கப் பட்டதுமான பிரேரணைகள் முற்று முழுதாக நிராகரிக்கப் பட்டுள்ளதால் முஸ்லிம்களிற்கு பாரிய அநீதி இழைக்கப் பட்டுள்ளதாக சுட்டிக் காட்டியது.
மேற்படி ஜனாதிபதி ஆணைக்குழுவில் இடம்பெற்ற முஸ்லிம் பிரதிநிதியும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தனது அதிருப்தியை வெளியிட்டதோடு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாற்றும் அமைச்சர்கள் கூட்டாக செய்ய முடியுமான நகர்வுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் அரசினால் அவசர அவசரமாக கொண்டுவரப்படும் சட்ட மூலங்களிற்கு முஸ்லிம் உறுப்பினர்கள் ஆதரவளிப்பது குறித்து கட்சி அரசியல் வேறுபாடுகளிற்கு அப்பால் மீள்பரிசீலனை செய்தல் வேண்டும் என தேசிய ஷூரா சபை சகலரையும் கேட்டுக் கொண்டது.
அதனை மேலும் வலியுறுத்தி சகல முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு தனித்தனியாக கடிதம் அனுப்பவும் கடந்த 25/06/2018 அன்று கொழும்பில் இடம்பெற்ற தேசிய ஷூரா சபையின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நாட்டில் தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும் அரசியல் சிவில் சன்மார்க்கத் தலைமைகள் போதிய அழுத்தத்தை அரசியல் தலைமைகளிற்கு வழங்க வேண்டும் என தேசிய ஷூரா சபை எதிர்பார்க்கின்றது.