“உத்தேச தேர்தல் சீர்தருத்தமும் சிறுபான்மையினரின் அதன் மீதான தாக்கங்களும்”
தேசிய சூரா சபையானது தேசிய இஸ்லாமிய அமைப்புகள், துறைசார் நிபுணர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய ஓர் தேசிய ஆலோசனை மன்றமாகும். இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களை சமூகத்தின் அனைத்து தரப்பினரதும் கருத்துகளைப் பெற்று, பரஸ்பர ஆலோசனைகளுக்கு ஊடாக தீர்வு காண்பதே இதன் பிரதான இலக்காகும்.
இலங்கை அரசியல் களம் மிகவும் வேகமாகவும், எதிர்பாராத மாற்றங்களையும் சந்தித்துக்கொண்டிருப்பதுடன் எதிர்கால நகர்வு பற்றி அனுமானிக்கவும் முடியாத நிலையில் உள்ளது. எனினும் எவ்வகையான மாற்றங்கள் நிகழினும் அவை இலங்கை முஸ்லிம் சமூகத்தில் பல்வேறு வகையான தாக்கங்களையும் செலுத்தக்கூடியனவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே, இவை பற்றி தேசிய ஷூரா சபை தொடர்ச்சியாக ஆராய்ந்து வருவதுடன் அது தொடர்பான முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தேர்தல் முறை மறுசீரமைப்பு, உத்தேச அரசியலமைப்பு திருத்தங்கள், தேர்தல் தொகுதிகளின் எல்லைகள் மீள்நிர்ணயம் என்பவற்றினால் முஸ்லிம் சமூகத்தின் மீதான தாக்கங்கள் குறித்து தேசிய ஷூரா சபை கவனம் செலுத்தி வருகிறது. கடந்த 22-02-2015 ஆம் திகதி இடம்பெற்ற தேசிய ஷூரா சபையின் பொதுச்சபை கூட்டத்திலும் பொதுச்சபை அங்கத்தவர்களினால் இது தொடர்பாக பல முன்மொழிவுகளும் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில், “உத்தேச தேர்தல் சீர்தருத்தம் மற்றும் சிறுபான்மையினரின் மீதான கரிசனை” எனும் கருப்பொருளில் ஆலோசனை மன்றம் (Consultative Forum) ஒன்றை தேசிய ஷூரா சபையின் அரசியல் உபகுழு இம்மாதம் நடாத்த ஏற்பாடு செய்துள்ளது.
இதன் முதற்கட்டமாக துறை சார்ந்தவர்களுடனான விஷேட ஆய்வமர்வு ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், ‘உத்தேச தேர்தல் சீர்தருத்தம் மற்றும் சிறுபான்மையினரின் மீதான கரிசனை’ தொடர்பான பொது மக்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கோரியுள்ளது.
தேசிய மட்டத்தில், பிராந்திய மட்டத்தில், குறிப்பிட்ட இனக்குழுவை அடிப்படையாக கொண்ட அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபார்கள் குறித்த விடயம் தொடார்பாக பின்வரும் விடயப்பரப்புக்கு உட்பட்ட வகையில் தமது முன்மொழிவுகளை சமர்ப்பிக்க முடியும்.
1. உத்தேசிக்கப்பட்ட கலப்பு தேர்தல் முறையின் சாதக பாதகங்கள்.
2. சிறுபான்மை இனம், சிறுபான்மை கட்சிகளுக்கான உரிய பிரதிநிதித்துவம்.
3. சிறுபான்மையினரின் அபிலாசைகளை உள்வாங்கும் வகையிலான தேசிய அரசியல் கட்சிகளை பலப்படுத்தல்.
4. வீண்விரயம், சுரண்டல், ஊழல், முறைக்கேடுகள் மற்றும் வன்முறைகளை குறைத்து பங்கேற்பு பிரதிநிதித்துவத்தின் தரத்தை மேம்படுத்தல்.
5. மக்களும், மக்கள் பிரதிநிதிகளும்: பொறுப்புக் கூறல் மற்றும் சகவாழ்வை நோக்கிய சாதக தன்மைகள்.
எனவே, இது தொடர்பான உங்களது முன்மொழிவுகளையும் முன்வைக்கலாம்.
உங்கள் கருத்துக்களை எழுத்து மூல ஆவணத்தை (200 – 300 சொற்களுக்கு கூடாமல்), மின்னஞ்சல் மூலமாக psc@nationalshoora.com அல்லது பெக்ஸ் மூலம்0112678850 இலக்கத்தினூடாக 16-03-2015ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்க செய்யுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
எமது தொலைபேசி (0766 270 470) இலக்கத்தினூடாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.