தேசிய சூரா சபை பிரதமர் ஹரினிக்கு கடிதம்
இலங்கைக்குச் சுற்றுலாப் பயணிகளாக வரும் இஸ்ரேலியர்களின் சட்டவிரோதச் செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்று தேசிய சூரா சபை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக தேசிய சூறா சபை பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த ஜனவரி 8, 2025 அன்று நாடாளுமன்றத்தில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து தாங்கள் ஆற்றிய உரையைக் குறிப்பிட விரும்புகிறோம். இலங்கையில் சினகோக்குகள் (Synagogues) அல்லது சபாத் மையங்கள் (Chabad Centers) அமைக்க அரசாங்கம் எந்த அனுமதியும் வழங்கவில்லை என தாங்கள் சுட்டிக்காட்டினீர்கள். மேலும், சுற்றுலா விசாவில் இலங்கை வரும் இஸ்ரேலியர்கள், தங்கள் விசா காலத்தில் எந்தவொரு வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது சட்டவிரோதமானது என்றும் தாங்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்தீர்கள்.
மே 15, 2025 அன்று கொழும்பில் நடைபெற்ற “நக்பா 77 ஆண்டுகள்” அல்லது ‘பலஸ்தீனியப் பேரழிவு’ நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட தாங்கள், பலஸ்தீனியர்கள், குறிப்பாகப் பெண்களும் குழந்தைகளும் படுகொலை செய்யப்பட்டது கற்பனை செய்ய முடியாத ஒரு மனிதப் பேரழிவு என்றும், இது குறித்து எந்த மௌனமும் குற்றங்களுக்கு உடந்தையாகும் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டீர்கள். தங்கள் இந்த அவதானிப்புகள் இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள காலனித்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் முற்போக்கு சிந்தனையுள்ள குடிமக்களால் மிகவும் வரவேற்கப்பட்டன.
தங்களால் குறிப்பிடப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை நிறுத்துவதற்கும், குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டம் உட்பட இலங்கைச் சட்டங்களின் கீழ் அவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை தேசிய சூரா சபை அறிய விரும்புகிறது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 2024 நவம்பர் 21 அன்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அப்போதைய இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோர் மீது மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பித்தது என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். “மற்றவர்களுடன் கூட்டாக” இக்குற்றங்கள் இழைக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. “மற்றவர்கள்” என்பதில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) மற்றும் பிற படைகளில் இருந்து, ‘மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களை’ இழைத்த “சுற்றுலாப் பயணிகளாக” இலங்கைக்கு வரும் இஸ்ரேலிய படையினரும் அடங்குவர்.
இத்தகைய படையினருக்கு எந்த விதமான விசாக்களை வழங்குவதானது ‘ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனியப் பிரதேசங்களில்’ ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களின்படி இஸ்ரேலிய படையினர் இழைத்ததாகக் கூறப்படும் ‘குற்றங்களுக்கு’ இலங்கை அதிகாரிகளும் ஆளும் கட்சியினரும் உடந்தையாகுவர் என்று தேசிய சூரா சபை நம்புகிறது. மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காக, இஸ்ரேலிய ஆயுதப் படைகள் மற்றும் உளவுத்துறைப் பணியாளர்களுக்கு எந்த விதமான விசாக்களையும் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது




