இலங்கை முஸ்லிம்களது வரலாற்றில் மிக முக்கியமான ஒரு அங்கமாக ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் அமைந்திருக்கிறது.
முஸ்லிம்களது சன்மார்க்க,உலகாயுத தேவைகளை மிகச் சரியாக இனம் கண்டு அவற்றை பூர்த்தி செய்வதற்கான தகைமைகளைக் கொண்ட, அதேவேளை இஸ்லாத்தை அதன் தூய வடிவில், காலத்தின் தேவைக்கேற்ப முன்வைக்கும் நற்பணியை முன்னெடுக்கும், தெளிந்த அறிவும், தூர நோக்கும், ஆராய்ச்சி உணர்வும் கொண்ட புத்திஜீவிகளை உருவாக்குவதை ஜாமியா நளீமியா இலக்காகக் கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது.
இஸ்லாமிய கலா ஞானங்களில் ஆழ்ந்த புலமையையும், மனித வாழ்வுக்குத் தேவையான ஞானங்களையும் ஏக காலத்தில் பெற்ற, திறன்களும் ஆற்றலும் கொண்ட அறிவுப் பரம்பரை ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மர்ஹூம் நளீம் ஹாஜியார் அவர்களும், அவரோடு கைகோர்த்த கல்விமான்களும் ஜாமியா நளீமியாவை உருவாக்கிய நோக்கம் இன்று வெற்றியடைந்திருப்பதை பாராட்டுகிறோம்.
பல பேராசிரியர்களையும், கலாநிதிகளையும்,நிர்வாகம், சட்டம், ஊடகவியல் போன்ற பல துறைகளில் சிறப்பாக சேவையாற்றும் கல்விமான்களையும்,போதகர்களையும் நளீமிய்யா உருவாக்கியிருப்பது அது பெற்றுள்ள பெரு வெற்றியாகும்.
ஜாமிஆ நளீமியா வெற்றிப் பாதையில் வீறுநடைபோட்டு, நாட்டுக்கும், நம் சமூகத்துக்கும் மென்மேலும் நற்பணியாற்ற தேசிய ஷூரா சபை அல்லாஹ்வைப் பிரார்த்தித்துக் கொள்கிறது.